தமிழில் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்துள்ள இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இப்போது குறைந்த பட்ஜெட்டில் சமூக அக்கறையை பிரதிபலிக்கும் கன்னிவெடி என்ற படத்தை இயக்கி வருகிறார். பெங்களூரைச் சேர்ந்த ஹூடாஷா என்பவர்தான் கதாநாயகி. முழுக்க முழுக்க கதாநாயகிக்கு இப்படத்தில் முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருக்கிறார் செல்வமணி. சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்காக பிரத்யேக பயிற்சி அளித்து நாயகிக்கு மெருகேற்றியிருக்கிறார். அவருடன் ஒரு குழந்தை நட்சத்திரத்தையும் வைத்துதான் கதை பின்னப்பட்டிருக்கிறது.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் கதாநாயகி அறிமுக விழா சென்னையில் இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் சிவா, இயக்குனர் லிங்குசாமி, இயக்குநர் சங்க தலைவர் விக்கிரமன், இயக்குனர் சேகர் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.
விழாவில் கதாநாயகியை அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, கன்னி வெடி படத்தின் கதைக்கரு உருவான விதம் பற்றி விளக்கினார்.
“நம் நாட்டின் பண மதிப்பு மற்ற நாடுகளின் பண மதிப்பை விட மிகவும் குறைந்திருக்கிறது. ஒரு டாலருக்கு நாம் 60 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. நம் நாட்டில் மனித வளம் நிறைய இருக்கிறது. ஆனால் அந்த அளவுக்கு பொருளாதாரத்தில் நாம் வளரவில்லை. இதனால் நீண்ட காலமாக எனக்கு ஒரு வருத்தம் இருந்தது.
எனவே, பொருளாதாரம் உள்ளிட்ட சமூக அக்கறையுள்ள கருத்துக்களை மையமாக வைத்து படம் பண்ண வேண்டும் என்று விரும்பினேன். அதன் வெளிப்பாடாகத்தான் இந்த ‘கன்னிவெடி’ உருவாகியிருக்கிறது. சமூக நோக்கோடு கருத்து சொல்லும் வகையில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த படம், நிச்சயம் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி இருக்கும்” என்றார் செல்வமணி.
No comments:
Post a Comment